Pages

Sunday, October 21, 2018

என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!

என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!


என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!

எதுவும் நடக்கும் - படித்ததில் சுவைத்த சிந்தனைக் கதை

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரையை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளையை விட்டு மெள்ள
தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும்!’ என்று ஆவலோடு பார்த்தது அந்த எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது ‘பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார் எனக்கு பயமாக இருக்கிறது’ என்று.

அதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது ‘உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம் தான்.
நல்லவேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை’ என்று.

‘உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது வான்கோழியும் அதே பதிலைச்
சொல்லியதோடு ‘நான் எலிப்பொறியை யெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்’ என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது.

ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அது மட்டும் அல்ல ஆடு, அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை ‘எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?’ என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள் ‘ஆ’ எனக்
கத்தினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது எஜமானியம்மாளை உடனே
ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு
ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி ‘பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு ‘சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது’ என்று
யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை.

உடனுக்குடன் கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம்
தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.

அவர்களுக்குச் சமைத்துப்போட வான் கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார் பண்ணையார்.
இப்போது எலி தப்பித்து விட்டது.

நீதி ::--

அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் ‘என்ன’ என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன
பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்

என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்!
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!

Monday, September 10, 2018

கிராமம் அது சொர்க்கம்

கிராமம் அது சொர்க்கம்



எங்களின் கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது...

சேவல் கூவும் சத்தத்தில் தான் அந்த நாளின் யுத்தம் தொடங்கும்...

எட்டாத வேப்ப மரத்தை எட்டிப் பிடித்து.. வேப்பங்குச்சி ஒடித்து பல் விலக்கும் காட்சி...


காலையிலே அப்பாவுக்காய் அம்மா ஆசையோடு போடும் நாட்டுச் சக்கரை டீ..


மாட்டுச் சாணம் அள்ளுவதில் இருக்கும் மனமகிழ்வு...

தண்ணீர் கலக்காத சத்தான பாலை மக்களுக்கு தரும் மாண்பு...

லாபமென்றாலும் செயற்கை உரமெனும் விஷத்தை தாயின் மடியிலே தெளிக்க மாட்டேன் எனும் விவசாயி.‌.

சந்தைக்கு போகும் அவசியமில்லை..
காய்கறிகளெல்லாம் எங்கள் தோட்டத்தில் விளைவதனால்...

மருத்துவர் தேவையில்லை ஏனென்றால் பாட்டிகள் எங்களுடன் இருக்கிறார்கள்...

சத்து மாத்திரைகள் தேவையில்லை.
அதைவிட சத்தான கீரைகள் எங்கள் மண்ணிலே விளைகின்றன...

ஆரோ தண்ணீரை விட ஆரோக்கியமான தண்ணி எங்கள் ஆற்றுத் தண்ணீர்...


 அனைத்து உணவும் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு வேலை இல்லை...

வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருப்பதால் நாங்கள் மறந்து கூட ஏசியை ஓசியில் தந்தாலும் வாங்குவதில்லை..‌.

 அண்டை வீட்டாரிடமும் அயல் வீட்டாரிடமும் முகம் கொடுத்து பேசுவதனால் அதிக நேரம் முகநூலில் முகம் பதித்து கிடையாது...

தெருவுக்கு நான்கைந்து பாட்டிகள் இருப்பதால் எங்கள் கிராமங்களில் சிசிடிவி க்கும் வேலையில்லாமல் போனது...

உண்மையிலே கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது..

பணம் காசு சொத்து சுகம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்..

முடிந்த வரை கிராமத்து வாழ்க்கையை வாய்ப்பிருக்கும் போதே அணுபவித்துக் கொள்ளுங்கள்.

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு...
முறித்து விடாதீர்கள்....