Pages

Monday, October 3, 2011

அயல் தேசத்து அநாதை

அயல் தேசத்து அநாதை


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் இருக்கும் கவிதை என்  நண்பர் DHINESH மின்னஞ்சல் வழியாக பெறப்பட்டது, அதுவும் அவருக்கு அவருடைய நண்பர் யாரோ அனுப்பியது ஆக உங்கள் பாரட்டுதல்கள் அந்த முகம் தெரியா நண்பருக்கே உரித்தாகட்டும்.

பொதுவாகவே கவிதைகளை பொருத்தவரை பத்து பக்கத்தில் எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயத்தை வெறும் பத்து வரிகளுக்குள் எழுதி சாட்டையில் அடித்தாற் போல புரிய வைத்துவிடும். இப்படித்தான் இந்த கவிதையும் இருக்கிறது ஒவ்வொரு வரியிலும் ஏக்கமும், சோகமும், விரக்தியும் ஒவ்வொரு வரிகளிலிலும் தெறிக்கிறது.. 

அயல் தேசத்து அநாதை 



இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை 
வந்தவனுக்கோ சென்று விட ஆசை 
இதோ 
அயல்தேசத்து அநாதைகளின் .. 
கண்ணீர் கதை ! 

விசாரிப்புகளோடும் 
எதிர்பார்ப்புகளுடனும் வருகின்ற ... 
தொலைபேசி அழைப்புகளை நினைத்து 
பரிதாபப்படத்தான் முடிகிறது ! 

நாங்கள் பூசிக்கொள்ளும் 
நறுமணத்தில் வேண்டுமானால்... 
வாசனைகள் இருக்கலாம்! 
ஆனால் 
வாழ்க்கையில்...? 

தூக்கம் விற்ற காசில்தான்... 
துக்கம் அழிக்கின்றோம்! 
ஏக்கம் என்ற நிலையிலேயே... 
இளமை கழிக்கின்றோம்! 

எங்களின் 
நிலாக்கால நினைவுகளையெல்லாம்... 
ஒரு 
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு! 

கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே 
கடல் தாண்டி வந்திருக்கிறோம் ! 
மர உச்சியில் நின்று ... 
ஒரு 
தேன் கூட்டை கலைப்பவன் போல! 

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு 
எழுந்த நாட்கள் கடந்து விட்டன! 
இங்கே 
அலாரத்தின் எரிச்சல் கேட்டு 
எழும் நாட்கள் கசந்து விட்டன! 

பழகிய வீதிகள் 
பழகிய நண்பர்கள் 
கல்லூரி நாட்கள் 
தினமும் 
ஒரு இரவு நேர 
கனவுக்குள் வந்து வந்து 
காணாமல் போய்விடுகிறது! 

நண்பர்களோடு 
ஆற்றில் பிடித்த மீன் 
பம்பரம் - சீட்டு - கோலி என 
சீசன் விளையாட்டுக்கள் ! 

இவைகளை 
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்... 
விசாவும் பாஸ்போட்டும் வந்து... 
விழிகளை நனைத்து விடுகிறது.! 

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த 
நண்பர்களின் திருமணத்தில் ! 
மாப்பிள்ளை அலங்காரம் ! 
கூடிநின்று கிண்டலடித்தல் ! 
கல்யாணநேரத்து பரபரப்பு! 
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக் கூறி 
வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்... 
நிச்சயித்தவளின் ஓரப்பார்வை! 
மறுவீடு சாப்பாட்டில் 
மணமகளின் ஜன்னல் பார்வை! 
இவையெதுவுமே கிடைக்காமலே போய்விட்டது...

கண்டிப்பாய் வரவேண்டும் என்ற 
சம்பிரதாய அழைப்பிதழுக்காக... 
சங்கடத்தோடு 
ஒரு 
தொலைபேசி வாழ்த்தூனூடே... 
தொலைந்துவிடுகிறது 
நண்பர்களின் நீ..ண்ட நட்பு! 

எவ்வளவு சம்பாதித்தும் என்ன? 
நாங்கள் 
அயல்தேசத்து அநாதைகள் தான்! 

காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற 
சொந்தங்களின்... நண்பர்களின் ... 
மரணச்செய்திக்கெல்லாம் 
அரபிக்கடல் மட்டும்தான்... 
ஆறுதல் தருகிறது! 

ஆம் 
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்... 
ஒரு கடலைத்தாண்டிய 
கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;! 

இறுதிநாள் நம்பிக்கையில்தான்... 
இதயம் சமாதானப்படுகிறது! 

இருப்பையும் - இழப்பையும் 
கணக்கிட்டுப் பார்த்தால் 
எஞ்சி நிற்பது 
இழப்பு மட்டும்தான்... 

பெற்ற குழந்தையின் 
முதல் ஸ்பரிசம் ... 
முதல் பேச்சு... 
முதல் பார்வை... 

இவற்றின் பாக்கியத்தை 
தினாரும்-திர்ஹமும்-டாலரும் 
தந்துவிடுவதில்லை? 

கிள்ளச்சொல்லி 
குழந்தை அழும் சப்தத்தை... 
தொலைபேசியில் கேட்கிறோம்! 

கிள்ளாமலையே 
நாங்கள் தொலைவில் அழும் சப்தம் 
யாருக்குக் கேட்குமோ ? 

பெற்ற குழந்தையின் முகத்தை கூட
தொலைபேசி வழியாகத்தான்
உருவகபடுத்தி
சிலாகித்து கொள்கிறோம்
யாருக்கு புரியும் எங்கள் ஏக்கம்!.....

ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்... 
பெற்ற குழந்தையின் 
முதல் பார்வை... 
நெருங்கியவர்களின் 
மவுணம், திடீர்மறைவு ... 

இப்படி புதிய முகங்களின் 
எதிர்நோக்குதலையும்... 
பழையமுகங்களின் 
மறைதலையும் கண்டு... 
மீண்டும் 
அயல்தேசம் செல்லமறுத்து 
அடம்பிடிக்கும் மனசிடம்... 

குழந்தைகளின் எதிர்காலமும்... 
எதிர்கால பயமும்... 
பொருளாதாரமும் வந்து... 
சமாதானம் சொல்லி 
அனுப்பிவிடுகிறது 
மீண்டும் அயல்தேசத்திற்கு!



இப்படிக்கு 

அயல் தேசத்து அநாதை


என்ன நண்பர்களே படிச்சிங்களா உங்கள் நண்பர்களோ அல்லது உங்கள் உடன் பிறந்த சகோதரர்களோ இது போல வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்ககூடும் உங்களுக்கு அவர்கள் ஏக்கம் தெரியாது எதையும் நாமாக நேரிடையாக அனுபவப்படும் போது மட்டுமே அதன் வலியும் தாக்கமும் புரியும் ஆனாலும் இந்த கவிதையை படித்து முடிக்கும் போது உணர முடிகிறது அதன் வலிகளையும் வேதனைகளையும்..


வாழ்க வளமுடன்