தமிழர்களே... தமிழர்களே...
தன்மானத் தலைவர்... தமிழர்களின் உயிர் நாடி... மக்களுக்காக வாழும் மனிதநேயம்... மக்கள் நலனுக்காக தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில் அமர்ந்து அயராது உழைக்கும் செம்மொழி கண்ட எம்மொழிச் சிங்கம்... அண்ணாவின் அடிபற்றி ஆட்சி செய்யும் அட்சய பாத்திரம்... பாராட்டு விழாக்களின் பகலவன்... டாக்டர் கலைஞர் அவர்களின் இளைஞன் திரைப்படம் இரண்டு காட்சிகள் ஓடியதோ இல்லையோ... காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீட்டு நாடகம் இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக ஓடியது.
நம்மளைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறதாலதான் இந்த வயசிலும் அவரு சிக்ஸர் அடிச்சு சதம் போடுறாரு... நாம இலவசங்களின் இயக்கத்தில் இயங்கும் சுய நினைவில்லா பதர்கள் என்பதால்தான் இலவசங்களால் நம்மை அடித்துப் போட்டு அவர் மக்களுக்காக ஆட்டம் போடுகிறார். தமிழகத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கைப் பிடிப்போடு இருக்கும் தம் மக்களாட்சித் தலைவர் கலைஞர் காங்கிரஸ்க்காரன் ஆட்சியில் பங்கு என்றதும் 'குய்யோ... முறையோ..' என்று குதித்து என்னமோ மக்களாட்சி நடத்துவது போல் மக்களே கேளுங்கள் இது நியாயமா...? தர்மமா...? என்றார்.
தொகுதிப் பங்கீட்டின் போது இத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையால் தூக்கம் இழந்து தவித்து அறிக்கைகள் விட்டார். 63 என்றதும் 60தான் என்றார்... இங்கே ஒரு கேலிக்கூத்து என்னவென்றால் 3 தொகுதிகளுக்காக கூட்டணி உடைந்ததாம். அவர்கள் என்ன கருணாநிதி, ஸ்டாலின் தொகுதிகளையா கேட்டார்கள். ஏதோ அறுவதும் அறுபத்து மூணும் எட்டாத தூரம் என்பது போல் முடியாது என்று சொல்லி கூட்டணி உடைந்ததாக அறிவித்தார். அதிலும் துரோகி கட்சி என்று விமர்சித்ததுடன் இனி அண்ணா வழியில் காங்கிரஸை பார்ப்போம் என்றார்.
இந்த நாடகத்தின் உச்சகட்டமாக பிரச்சினை அடிப்படையில் ஆதரவு என்றும் ராஜினாமா என்றும் தனது வழக்கமான ராஜ தந்திர அம்பை பிரயோகித்தார். இது தெரியாமல் பல அல்லக்கைகள் உடனே அறிக்கைகள் விட்டு அசத்தினார்கள். பாவம் வெளிவராத படத்துக்கு விமர்சனம் எழுதியது போல் ஆகிவிட்டது அவர்கள் நிலை. கறுப்புத்துண்டும் சிறுத்தையும் தன்மானம் இழந்து தவிப்பது தெரியாமல் புன்னகை பூசி புலியாக காட்டிக் கொள்கிறார்கள்.
இதைவிட கொடுமை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவரும் திரு. இளங்கோவன், சுதந்திரம் கிடைத்தது என்று மகிழந்தார். பாவம் கலைஞர் கைதேர்ந்த எழுத்தாளர் என்பது அவருக்கு தெரியவில்லை... கதாநாயகனாக சிங்கும் நாயகியாக சோனியாவும் நடிப்பதும் கூட அவருக்கு தெரியவில்லை போலும். இனி அவர் எந்த முகத்துடன் தலைவர் கலைஞருடன் இணைந்து செயல்படப் போகிறார், அரசியல்ல இதெல்லாம் சகஜம்... தொடச்சிட்டு போக வேண்டியதுதானே... அஞ்சு வருசமாக போகாத தொகுதிக்குள்ளயே தன்மானத் தமிழனா ஓட்டுக் கேட்டு போகாமயா இருக்காங்க... எல்லாம் சரியாகும்... நாளைக்கே நிரந்தர முதல்வர் அவர்களேன்னு போயி பாத்துப் பேசிட்டு பேட்டியும் கொடுத்திட மாட்டாரா என்ன...
சரி விசயத்துக்கு வருவோம்... கூட்டணி முறிவுக்கு அறுபத்தி மூணுதான் காரணமா என்ற கேள்விக்கு அதுவும் ஒரு காரணம் என்றார். அப்ப மற்ற காரணங்கள்...? அதுக்காகத்தானே இந்த விவாகரத்து நாடகம். எல்லாரும் நல்லா நடிக்கிறாங்கய்யா... எப்பவும் இவங்க நடிக்கிறதை பார்ப்பதும்... டீக்கடையில உக்காந்து தினத்தந்தி பாத்து அலசுறதுமே நம்ம பொழப்பாப் போச்சு... பிள்ளைகளுக்காவது செம்மறி ஆட்டுக் கூட்டத்துல இருந்து விலகி வர பழகிக் கொடுப்போம்
தில்லியில உக்கார்ந்து பேசுனாங்களாம்... அப்ப கூட்டணி பேரம் சரியாயிடுச்சாம்... 63க்கு சம்மதிச்சிட்டாங்களாம். இந்தப் பிரச்சினையில காங்கிரஸ் கடைசி வரைக்கும் நின்னு ஜெயிச்சதாவும் நம்ம தன்மானத் தலைவர் அம்மாகிட்ட (இது டெல்லி அம்மா) சரணடைஞ்சிட்டாருன்னும் சொல்றாங்க...
எப்ப தலைவரு சரணடைஞ்சிருக்காரு... அவருக்கு வேண்டிய பேரங்கள் எல்லாம் முடிஞ்சாச்சு... இனி கலைஞர் தொலைக்காட்சிக்கு ரெய்டு தொல்லை இருக்காது... மகளுக்கு கைது பயமில்லாம தூக்கம் வரும்... ராசவுக்கும் கொஞ்சம் நிம்மதி வந்திருக்கும்... பேரனும் மகனும் இன்னும் சம்பாதிக்கலாம்... இன்னும் நிறைய சாதங்கள் இருக்குல்ல... இப்ப சொல்லுங்க இந்த நாடகத்துல சரணடைஞ்சது யாரு... ?
ஏதோ தமிழக மீனவர்கள் கொல்லப்படுறதுக்கும் இலங்கையில தமிழன் அழிக்கப்படுறதுக்கும் எதிர்ப்பு தெரிவிச்சு காங்கிரஸ் கூட்டணிய முறிச்சிக்கிட்டது போலவும் உடனே அவங்க தமிழர்கள் பாதுகாப்புக்கு நாங்க பொறுப்புன்னு செம்மொழியில உறுதி கொடுத்ததால மக்கள் நலனுக்காக மீண்டும் கூட்டணியை தொடர்வது போலவும் அவங்களும் அறிக்கை விடுறாங்க... நாமளும் டீயை குடிச்சிக்கிட்டு படிச்சு சந்தோஷப்படுறோம்... இது கொள்கைக்காக ஏற்பட்ட கூட்டணி இல்லை... கொள்ளைக்காக தொடரும் கூட்டணி... போயி புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலையப் பாப்போம்....
மக்கள் பிரச்சினைக்காக கடிதம் எழுதும் டாக்டர் கலைஞர் தம் மக்கள் பிரச்சினைக்காக தில்லிக்கே போவார்... அங்கிருந்து அறிக்கையும் விடுவார்... இதில் இருக்கும் குடும்ப பாசமெல்லாம் நமக்குத் தெரியாது... தெரிஞ்சிருந்தாத்தான் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத... ஐந்து வருடங்களாக ஏறெடுத்துப் பாக்காத... நிரந்தர எம்.எல்.ஏ. போலிப் புன்னகையோடு ஓட்டு கேட்டு வந்ததும் எல்லாம் மறந்து ஓட்டுப் போட்டு மீண்டும் தேர்ந்தெடுக்க மாட்டோமே...
பாமக ஒரு இடத்தை விட்டுக் கொடுத்திருக்காம்.... எத்தனை இடம் கேட்டாலும் திருப்பிக் கொடுக்கும் குணம் கொண்டவர்தான் மருத்துவர் ஐயா... ஆனால் அன்பு மகனுக்கான ஒரு இடத்தை கேட்டிருந்தால் கூட்டணியை விட்டு முதல்ல வெளிய வந்திருப்பாருல்ல... சரி.. விடுங்க...
இங்கிட்டு மட்டுமில்ல அங்கிட்டு... பெரியாத்தா நம்மகிட்ட வந்தாலும் வருமின்னு நம்மாத்தா காத்திருந்திச்சு... அதுக்காக அம்மா புகழ்பாடி சோர்ந்திருக்கும் மறுமலர்ச்சியை கண்டுக்காம இருந்திச்சு... இனி அவருக்கு எதாவது போடும்... பாக்கலாம்... நல்ல பேச்சாளன் இன்னைக்கு கேப்டனுக்கு கிடைச்ச மரியாதையில் பாதிகூட இல்லாமல் காத்திருக்கிறார்... பாவம்...
இங்கிட்டு மட்டுமில்ல அங்கிட்டு... பெரியாத்தா நம்மகிட்ட வந்தாலும் வருமின்னு நம்மாத்தா காத்திருந்திச்சு... அதுக்காக அம்மா புகழ்பாடி சோர்ந்திருக்கும் மறுமலர்ச்சியை கண்டுக்காம இருந்திச்சு... இனி அவருக்கு எதாவது போடும்... பாக்கலாம்... நல்ல பேச்சாளன் இன்னைக்கு கேப்டனுக்கு கிடைச்ச மரியாதையில் பாதிகூட இல்லாமல் காத்திருக்கிறார்... பாவம்...
எல்லா நாடகமும் முடிவுக்கு வருகிறது... தேர்தலில் நமது முடிவை நாமே எடுப்போம்... இன்னும் கதை பேசி காலத்தை ஓட்டாமல் சிந்திப்போம்... சில மாற்றங்களையாவது நாம் சந்திப்போம்...