"ஒரு வேளை" ஜெயலலிதா முதல்வரானால் காத்திருக்கும் சவால்கள்...
தமிழக அரசின் மோசமான நிதி நிலைமை.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி அளவில் கடன் இருப்பதாக பேச்சு. (இலவசங்களை தொடர வேண்டிய கட்டாயம் இருப்பதால் நிதி நிலைமை இன்னும் மோசமாகும்)
தொடர்ந்து நீடித்து வரும் மின்சார பிரச்சனைகள்.
விஷம் போல அதிகரித்து வரும் விலைவாசி.
நலிந்து வரும் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் (ஏற்றம் என்பது விவசாயின் வாழ்வில் வரும் போது தமிழகம் நிரந்தரமாக முன்னேற்றப்பாதையில் நடைபோட ஆரம்பிக்கும்)
நிரந்தர பிரச்சனைகளாக இருக்கும், முல்லை-பெரியாறு, காவிரி பிரச்சனை, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் அடிக்கடி தாக்கப்படுவது.
எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்.
அரசின் நடைமுறைகளில் அதிகரித்திருக்கும் தனிப்பட்ட சிலரின்அதீததலையீடுகள்.
மங்குனி அமைச்சரின் "தில்லாங்லங்கடி" ஆலோசனைகள்:
விடுங்கம்மா, ஆட்சிக்கு வந்த முதல் நாளே "கஜனா காலி, கருணாநிதி அத்தணையும் சுரண்டி விட்டு போய் விட்டார்" என்று டெரர் அறிக்கை வெளியிட்டு மக்களை முன்கூட்டியே உஷார் பண்ணிவிடலாம். பயபுள்ளைகளும் கொஞ்சநேரம் அழுதுட்டு தூங்கிருவாங்க.
நிதி நிலைமையை சீராக்க, டாஸ்மார்க் நிறுவனத்தில், நம்ம மிடாஸ் கம்பெனி தயாரிப்புகளில் நிறைய புதிய வகைகளை உருவாக்கி, விற்பனையை அதிகமாக்கி, கஜானாவை நிரப்புதல்.
மின்சார தட்டுப்பாட்டிற்கு, கேரளா மற்றும் கர்நாடக அரசுகளுடன் கருணாநிதி, ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டதால் தான் மின்சார தட்டுப்பாடு வந்தது என்று முழங்கலாம்.
சீசன் பிரச்சனைகளாகிய காவிரி, முல்லை-பெரியாறு பிரச்சனைகளில் அந்த நேரத்துக்கு ஏற்ப, தபால்-தந்தி, உண்ணாவிரதம் என ஏதாவதுடிராமா நடத்தி அப்போதைக்கு ஆறப்போடுவது.
ஊழலை ஒழிக்க என்று தனி அமைச்சகம் அமைத்து. முந்தைய அரசுகளின் கள்ளத்தனங்களை விசாரணை கமிஷன் மூலம் பெரிய தலைகளை, நள்ளிரவில் உருட்டி மக்களின் பிற கவலைகளை மறக்க வைத்தல்.
ரஜினிகாந்தை கொஞ்சம் வம்புக்கு இழுத்து, தமிழக ஊடகங்களை நிரப்பி, வெறும் வாயை மெல்லும் மக்களுக்கு, அவல் கொடுத்து,யதார்த்தங்களை மறக்கடிப்பது.
நிழல் அரசாங்கம் நடத்தும் மன்னார்குடி ராஜவம்சத்துக்கு அதிக அதிகாரம் கொடுப்பதற்க்காகவே சசிகலாவை துணை முதல்வராக்குவது.
மதியூக அமைச்சரின் யதார்த்த ஆலோசனைகள்:
அதிக செலவு வைக்கும் அத்தியாவசியமில்லாத இலவச திட்டங்களை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்து, அரசின் பயனுள்ள நலத்திட்டங்களுக்கு மட்டும் நிதியை ஒதுக்கி, நிலைமையை சீராக்கலாம்.
இயன்ற வரை இலவசங்களை குறைத்து, அந்த பணத்தினை மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு உபயோகப்படுத்தலாம்.
காற்றாலைகள் உருவாக்குதல், மரபு சார எரிபொருள்கள் மூலம்மாற்று வழிகளின் மூலம் மின்சார தேவைகளை ஈடுசெய்யலாம்.
நதிகள் பற்றிய பிரச்சனைகளுக்கும், ,மீனவர் பிரச்சனைகளுக்கும் வெறுமனே டிராமா நடத்திக்கொண்டிருக்காமல் நிரந்தர தீர்வை உண்டாக்க, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தல்.
ஊழலை எந்த மட்டத்திலும் அனுமதிக்காமல் முன்னுதாரணமாகஇருத்தல்.
தனிப்பட்ட ஒரு குடும்பத்தாரின் நிழல் அரசாங்கத்திற்கு, வழி விட்டுவிட்டு, ஜெயலலிதா நல்லவர், சசிகலா தான் கெட்டவர் என்று உங்களுக்காக யார் பரிந்து பேசினாலும் அது எடுபடபோவதில்லை.
(பொழுது போக்க வளர்ப்பு செல்லப்பிராணிகள் மட்டும் உங்களிடம் இருக்கட்டும் - வளர்ப்பு மகன்களும் வேண்டாம், அவர்தம் திருமண கூத்தும் வேண்டாம்.)
பழிவாங்கும் நடவடிக்கைகளிலு, திரைப்பட துறையினரின் பாராட்டு விழாக்களிலும் நேரத்தை வீணாடிக்காமல், எளிய ,மக்களுக்கான ஆட்சி நடத்தி, பெண் எம்.ஜி.ஆர் என அடித்தட்டு மக்களிடம் பெயர் வாங்க வேண்டும்.
மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது, தடாலடி நடவடிக்கைகளை அல்ல,நம்பகத்தன்மையை மட்டும் தான். எல்லோருக்கும் இணக்கமான அரசை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போது கூட தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் சொன்னது உங்கள் தன்னம்பிக்கையை காட்டினாலும், கூட்டணி கட்சிகளுக்கு பூச்சாண்டி காட்டி,கலவரப்படுத்தாமல், அவர்களின்ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு ஒரு வார்த்தை:
நீங்கள் எதையெல்லாம் கலைஞரின் குறைபாடுகள் என்று சுட்டிக்காட்டி,
மக்களின் ஓட்டுக்களை வாங்கினீர்ளோ, அதே தவறுகளை நீங்களும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு.
டிஸ்கி:
மங்குனி அமைச்சர் சொல்வதை ஜெயலலிதா கேட்பாரா அல்லது மதியூக அமைச்சர் சொல்வதை ஜெயலலிதா கேட்பாரா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
A.D.M.K. க்கு வாக்களித்தவனின் எதிர்பார்ப்பு..